காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே பொன்னேரி கரை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் பிடித்தம் மற்றும் தீர்வு, தொழிலாளர் நலன் பிரிவில் கண்காணிப்பாளராக சென்னை திருவேற்காடு நூம்பல் சூசை நகர் பகுதியைச் சேர்ந்த மணி (59 )பணிபுரிந்து வந்தார். கண்காணிப்பாளர் மணி வழக்கம் போல் புதன்கிழமை சீக்கிரம் பணிக்கு வந்த நிலையில் திடீரென அறையின் மின்விசிறியில் டவல் மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் அலுவலகத்திற்கு வந்த பணியாளர்கள் இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் மணியின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்காணிப்பாளர் மணி தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்னையா?, அல்லது பணிசுமையா? என்ற கோணத்தில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/i597yNF https://ift.tt/JEVjSM8
via
IFTTT
0 comments:
Post a Comment