சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான ‘தி லிட்டில் பெஸ்டிவல்’ என்ற கலை விழா ஜூலை 2-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை நடந்தது. இதனை தி லிட்டில் தியேட்டர் என்ற குழந்தைகளுக்கான நாடகக் குழு, INKO (Indo-Korean) சென்டருடன் இணைந்து நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தென் கொரியாவின் பிரபல மேடை நாடகக் கலைக்குழுவான ArtstageSAN என்ற அமைப்பும் சென்னை வந்திருந்தது. "தி கூக்ஸ்" ( The kooks)
இந்த நிகழ்ச்சி மொத்தம் இரண்டு நிரல்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. ஜூன் 2 முதல் 4 வரை இந்தியா தலைமையில் "தி கூக்ஸ்" ( The kooks) என்ற அதிரடி நகைச்சுவை மேடை நாடகம் நடைபெற்றது. அழியும் நிலையில் உள்ள உலகத்தைக் காக்கும் பொறுப்பு ஒரு மாயாஜால சமையல் குழுவின் கையில் கொடுக்கப்படுகிறது. அந்த விசித்திரமான சமையல்காரர்கள், தங்கள் சமையல் அறையில் இருந்து உலகத்தைக் காக்க பல மாய உலகங்களுக்கும், வேறு பரிமாணங்களுக்கும் பயணம் செய்கிறார்கள். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், உலகைக் காக்கும் அந்த உணவை நம் கோமாளி சமையல் கலைஞர்கள் செய்து முடிக்கிறார்களா என்பதை பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்தாகப் படைத்திருக்கிறார்கள் தி லிட்டில் தியேட்டரின் ’தி கூக்ஸ் ஷோ.’
ஜூன் 5ம் தேதி கொரியாவின் ArtstageSAN குழுவினர் "ஹிஸ் டே" (His day) என்ற கொரியன் பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களுக்கு கண்கவர் கலை நிகழ்ச்சியை நிகழ்த்தினர். இது 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்ச்சி. தனக்கென நேரமே இல்லாமல் சலிப்பான ஓட்டத்தில் சிக்கியிருக்கும் ஒரு சோர்வடைந்த மனிதனின் அன்றாட வாழ்க்கையை இந்த நிகழ்ச்சி சித்திரிக்கிறது. "ஹிஸ் டே" (His day)
ஒவ்வொரு நாளும் வேலையிலிருந்து களைத்து வரும் அவர், இரவில் தனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளோடு கனவுலகத்தில் இளைப்பாறுகிறார். அதே சமயம் இன்னொரு சந்தர்ப்பத்தில், தனது முதலாளியின் ஆவேசத்தால் அவர் சந்திக்கும் மன அழுத்தத்தை ஒரு சர்க்கஸ் காட்சியாக கொரியன் குழுவினர் அட்டகாசமாகச் சித்திரித்தனர். இந்தக் கதையை வீடியோக்கள், பொம்மைகள், மைம் ஆகியவற்றின் உதவியுடன் மிக அழகாகவும் அதே சமயம் காத்திரமாகவும் பதிவு செய்திருந்தனர். கொரியன் பொம்மலாட்டத்தைத் தொடர்ந்து, ’மன ஆரோக்கியத்தில் கலையின் தாக்கம்’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அடுத்ததாக ஜூன் 6-ம் தேதி, மீண்டும் கொரியன் பொம்மை நாடகம் மற்றும் சிறப்பு கொரியன் பயிற்சிப் பட்டறையுடன் இந்தக் கலை விழா நிறைவு பெற்றது.
இந்த இந்திய-கொரிய கலை விழா குறித்து தி லிட்டில் தியேட்டர் நாடகக் குழுவின் தலைவர் டாக்டர் ரோஹிணி ராவ் கூறுகையில், "இந்த லிட்டில் பெஸ்டிவல் நிகழ்ச்சி தொடர்ந்து 12 வருடங்களாக வெவ்வேறு நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டுவருகிறது. இதற்கு முன்னர், ஜெர்மனி, ஈரான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் இணைந்து கலை விழா ஏற்பாடு செய்திருந்தோம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் ஸ்பெயின் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் விசா பிரச்சனையால் அந்நாட்டுக் கலைஞர்களால் கலந்து கொள்ளமுடியவில்லை. அதனால், தென் கொரியாவுடன் இணைந்து, தி லிட்டில் தியேட்டரின் மேனேஜிங் தலைவரான ஆய்ஷா ராவ் மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ArtstageSAN
குறிப்பாக, இந்த நிகழ்ச்சியானது இளம் பார்வையாளர்கள் அதாவது பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு, மற்ற நாடுகளின் மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்நாடுகளுடனான ஒரு நல்லிணக்கத்தை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கம். இதன் மூலம் மாணவர்களுக்கு பிற நாட்டு மக்கள்/ நாடுகள் மீதான வன்முறை எண்ணங்கள் எழுவதைத் தவிர்க்கலாம்.
மேலும், சென்னையில் குழந்தைகளுக்காக நடத்தப்படும் முதல் சர்வதேசக் கலை விழா இதுதான். இரண்டு நாள்களாக நடைபெற்ற 'தி கூக்ஸ்' (The kooks) நிகழ்ச்சியைக் காண எங்கள் அரங்கை அலங்கரித்து அமர்ந்திருந்த குழந்தைகளைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. 'தி கூக்ஸ்' நகைச்சுவை நாடகத்தில், அந்நாடகத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன், சூரரைப் போற்று திரைப்படத்தின் கலை இயக்குநர் மற்றும் நடிகருமான சைத்தன்யா ராவ் உட்பட ஆறு கலைஞர்கள் பங்கேற்று நடித்தார்கள். கொரியன் பொம்மலாட்டம்
ஜூன் 5-ம் தேதி, ’மன ஆரோக்கியத்தில் கலையின் தாக்கம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. அதில் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நடனக் கலைஞர் அனிதா ரத்னம் மற்றும் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளியின் இயக்குநர் டாக்டர் பவானி சங்கர் மற்றும் மனநல மருத்துவரான சுஜாதா வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்” என்றார் ரோஹிணி ராவ்.
- மணிமேகலை பெரியசாமி
http://dlvr.it/Ss9Gj6
Friday, 14 July 2023
Home »
» தி லிட்டில் பெஸ்டிவல்: சென்னையில் நடந்த கொரியன் பொம்மலாட்டம்







0 comments:
Post a Comment