சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சுவாமி சித்திரைத் தேர்த்திருவிழாவையொட்டி திருத்தேர் வடம் பிடத்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றன. சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் வைகாசி தேர்த்திருவிழா ஏப்.26 ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையடுத்து சுவாமிக்கு நாள்தோறும் சுவாமி தங்கும் மண்டபத்தில் நண்பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 8 நாட்கள் சுவாமி அன்னபட்சி, சிங்கம், அனுமந்தன், கருடன், சேஷன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தார். 9 ஆவது நாள் வியாழக்கிழமை காலை அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினர். தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து வழிப்பட்டனர். மாலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருளிய சப்பாரத்தினை முன்னதாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருளிய சப்பாரத்தினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அதனையடுத்து அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் எழுந்தருளிய பெரிய தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரினை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளை குடும்பத்துடன் வழிப்பட்டுச் சென்றனர். முதன்முறையாக விழாக்குழுவினர் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் புளியோதரை அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பெரிய தேரினை திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலர் டி.எம்.செல்வகணபதி தரையில் தேங்காய்களை உடைத்தும், வடம் பிடித்தும் தொடக்கி வைத்தார். அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் எழுந்தருளிய பெரிய தேரினை வியாழக்கிழமை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். பட்டக்காரர் எஸ்.ஏ.ராஜவேல், ஊர்க்கவுண்டர் எஸ்.டி.சுந்தரேசன், திருவிழாக்குழு உறுப்பினர்கள் மாவட்ட துணைச் செயலர் க.சுந்தரம், லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் என்ஆர்எஸ்.கந்தசாமி, திமுக நகரச் செயலர் கே.எம்.முருகன், பக்காளியூர் எஸ்.சரவணன், வி.என்.பாளையம் எஸ்.சண்முகசுந்தரம், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். பல்வேறு கட்டளைகளுக்கு பிறகு சுவாமிக்கு மே.14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஊஞ்சல் உற்சவமும் அதனையடுத்து மே.15 ஆம் தேதி திங்கள்கிழமை காலை சுவாமி திருமலைக்கு எழுந்தருளுகிறார் அன்றைய தினம் மலை மீது வன்னிய குல சத்திரியர்கள் அமைப்பின் சார்பில் மாலையில் குறிச்சி அலங்காரம் பல்வேறு வாண வேடிக்கைகளும் நடைபெற உள்ளன.
from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/2zSgqr8 https://ift.tt/FnwNJHu
via
IFTTT
0 comments:
Post a Comment