வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
பயணங்கள் எப்பொழுதுமே இனிமையானவை! அதிலும்,புது இடங்களில் நமது இளவல்கள் இருக்கும் இடங்களுக்குப் பயணிக்கையில் இரட்டைச் சந்தோஷமே!ஒன்று,புது இடங்களைக் கண்டு களிப்பது!இரண்டாவது,இளவல்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பது!
இரும்புக் குதிரையில்…அதாங்க,சைக்கிளில் குரங்குப் பெடலில் ஆரம்பித்த பயணம்,பஸ்,கார்,ரயில் என்று வளர்ந்து,இன்று விமானத்தில் வந்து நிற்கிறது.சிறு வயதில் ஓடும் பஸ்ஸில் போவதே உற்சாகமானதாக இருந்தது.ரயிலின் சன்னல் பக்கம் அமர்ந்து,அருகிலுள்ள மரங்கள் தலைதெறிக்கப் பின்னோக்கி ஓடுவதையும்,தூரத்தில் தெரிபவை மெல்ல நம்மை நோக்கி வருவது போலவும் மாயத் தோற்றம் காட்டி,மனதை மகிழ்வித்ததை மறக்க முடியாதே!
மெதுவாக வளர்ந்து விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தபோது,விண்டோ பக்கம் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது சுவாரசியம் மிகுந்ததாக இருந்தது.ரன் வேயில் அந்த ராட்சதப்பறவை வேகமெடுக்கும் வேளையில்,இரு பக்கமும் உள்ள நீல விளக்குகள் அசுரவேகத்தில் பின்னோக்கி ஓடுவதைப் பார்க்கையில் உள்ளத்தில் பீறிடும் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.அது வானத்தில் நிலையாகப் பறக்க ஆரம்பித்ததும்,வீட்டின் உள்ளே இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதை என்னென்பது!
இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளெல்லாம் மகத்தானவை மட்டுமல்ல!-மனிதனின் மூளை வளர்ச்சிக்குச் சான்று! இதுவே இப்படி என்றால் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஏஐ(AI)இன்னும் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தப் போகிறதோ! என்ற ஆவல் நம்மைத் தூங்க விடாமல் செய்கிறது!representational image
ஆகாயத்தில் பறப்பது ஆரம்பத்தில் ஆனந்தம் தரக் கூடியதாகவே இருந்தது.அரை மணி ஒரு மணி நேரப் பயணம் தந்த ஆனந்தம் அளவிடற்கரியது! அப்புறம் அதுவே ஆறு மணி நேரம்,10 மணிநேரம்,18 மணி நேரம் என்று ஆகிய பிறகு ‘பழகப் பழகப் பாலும் புளிக்கும்’என்பது போல,உற்சாகம் குறைய ஆரம்பித்தது.எதிரே இருக்கும் சின்னத்திரையில் திரைப்படங்கள்,விளையாட்டுக்கள்,செய்திகள்,விமான வழி விபரங்கள் என்று ஏகப்பட்டவை இருந்தாலும்,தொடர்ந்து அவற்றையே பார்ப்பது அலுப்பு தரும் நிகழ்வே.பஞ்சுப் பொதியைப்போல் அந்தரத்தில் தொங்கும் மேகக் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு மேலே போய்விட்டால்,அப்புறம் தெரிவதெல்லாம் நீல வானம் மட்டுமே! சரி! நாம் பயணத்தைத் தொடங்கலாமே!
சென்னை விமான நிலையத்தின் புதிய பன்னாட்டு முனையம் விஸ்தாரமானது.இரவு 9.40 க்குப் புறப்படும் துபாய் விமானத்தில் எங்கள் முதல் பயணம்.சுமார் 4.15 மணி நேரம்.அங்கு இறங்கி,அடுத்து அர்லாண்டோ விமானத்தைப் பிடிக்க 2 மணி நேரம் 20 நிமிட இடைவெளி. அர்லாண்டோ விமானத்தில் ஏறி 15.35 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அமெரிக்க மண்ணின் அர்லாண்டோவில் கால் பதிக்கலாம்.
சென்னையிலேயே அரை மணி நேரத் தாமதம்.எங்கே அது அடுத்த விமானத்தைப் பிடிப்பதில் சிரமம் ஏற்படுத்தி விடுமோவென்ற பயம் வேறு மனதில்.ஆனாலும் துபாய் விமான நிலையத்தில் உள்ள வீல் சேர் உதவியாளர்கள் மிகவும்உதவி கரமானவர்கள்.
பெரும்பாலானவர்கள் நம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது,பொறுப்புடனும்,புரிதலுடனும் பயணிகளுக்கு உதவுபவர்கள்.
அர்லாண்டோ விமானம் களைப்பேயடையாமல் சுமார் 15.30 மணிநேரம் பறந்து,அமைதியான அர்லாண்டோ விமான நிலையத்தில் எங்களை இறக்கி விட,வீல் சேர் உதவியாளர் உதவியுடன் பேக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ‘போர்ட் ஆப் என்ட்ரி‘ சென்றோம்.எமது அனுபவத்தில் இங்கு மட்டுந்தான் நமது லக்கேஜ்களுடன் போர்ட் ஆப் என்ட்ரி செல்ல வேண்டியிருந்தது. மற்ற எந்த விமான நிலையத்திலும் இந்த முறை இல்லை. பார்மாலிட்டிகளை முடித்துக்கொண்டு அப்புறந்தான் ‘லக்கேஜ் க்ளைம்’ ஏரியாவுக்கே வருவோம்.வீட்டிலிருந்து அரை மணி நேரக் கார்ப்பயண தூரத்தில் டாம்பா விமான நிலையம் இருந்தும்,ஒன்றரை மணி நேரப் பயண தூரத்தில் இருக்கும் இந்த விமான நிலையத்திற்கு வரக் காரணம் உண்டு.Dubai
டாம்பா வரும் விமானங்கள்,ஒவ்வொரு பயணிக்கும் 23 கிலோ லக்கேஜை மட்டும் அனுமதிக்கின்றன.அர்லாண்டோ வரும் விமானங்களோ 46 கிலோ லக்கேஜை எடுத்து வரச் சந்தர்ப்பம் அளிப்பதே இதற்குக் காரணம்.எல்லா விமான நிறுவனங்களும் ஒரே மாதிரியான விதிமுறைகளைப் பின்பற்றினால் பயணிகள் பயன்பெறுவார்களே!
அப்புறம், யாம் கவனித்தவரை,துபாயிலிருந்து புறப்படும் விமானம் நேராக வடக்கே சென்று,வட துருவ எல்லையையடைந்து, கிரீன் லாண்டில் புகுந்து அங்கிருந்து நேராகத் தெற்கு நோக்கிப் பயணித்து அர்லாண்டோவை அடைகிறது.அதாவது தலைகீழான ‘ப’ வடிவிலான பயணம்.துபாயிலிருந்து வடமேற்கு நோக்கி குறுக்காகப் பறந்தால்,பயண நேரத்தில் பாதி குறைவான காலத்திற்குள்ளாகவே அர்லாண்டோவை அடைய முடியும்.அப்படிச் செய்ய முடியாததற்கான காரணங்கள் நிறைய இருக்கலாம்.ஆனாலும் விஞ்ஞான முன்னேற்றங்கள் அதற்கு வழி வகுக்கவில்லையா என்பது எம் மனத்தில் ஊறும் எண்ணம்.விபரம் தெரிந்தவர்கள்தான் விடை பகர வேண்டும்.விரைவில் குறுக்கு வழியில் செல்ல உபாயம் கூற வேண்டும். நேரம்,எரிபொருள்,செலவு என்று அனைத்தும் மிச்சமாகும்.
புளோரிடா, அமெரிக்காவின் தென் கிழக்குக் கடற்கரையில்,மியாமியை உள்ளடக்கிய ஒரு மாகாணம்.உலகின் நம்பர் ஒன் கடற்கரை மியாமி.இரண்டாவது பெரியது நமது சென்னை மெரினா கடற்கரை என்பதில் நமக்கெல்லாம் பெருமையே!அமெரிக்கா,கிழக்கு மேற்கில் வியாபித்துள்ளதால்,ஒரே நாட்டிற்குள் நேர வித்தியாசம் உண்டு.பருவ நிலை மாற்றங்களும் உண்டு.வடக்கிலுள்ள மாநிலங்கள் வாட்டும் குளிரைக் கொண்டவையாக உள்ள நிலையில்,புளோரிடா மாநிலம் ‘Sun Shine State’என்றே அழைக்கப்படுகிறது.
அதாவது ‘சூரிய ஒளி மிளிரும் மாநிலம்!’ இங்கு மிதமான வெப்ப நிலையே ஆண்டு முழுவதும் நிலவுவதால், மற்ற மாநிலங்களில் வசிக்கும் அமெரிக்கர்களே கூட அடிக்கடி இங்கு படையெடுத்து விடுகிறார்கள். தென் இந்தியாவிலிருந்து வந்த பெரும்பாலானவர்கள் இங்குதான் வசிக்கிறார்கள். நம்மூர் பணக்காரர்கள் ஊட்டியிலோ அல்லது கொடைக்கானலிலோ ஒரு வீடு வைத்திருப்பதைப்போல இங்குள்ள பலரும் புளோரிடாவிலும் ஒரு வீடு வைத்துள்ளார்கள் - இதமான பருவ நிலையில் வாழ!அமெரிக்காவின் பல நகரங்கள் பனியில்நடுங்க, புளோரிடாவோ பகலவன் ஒளியில் பாங்காய் மிளிர்கிறது!Florida
நம் சென்னை மாநகரமும்,தற்போது வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளும்கூட எந்த அறிவார்ந்த திட்டமிடலும் இன்றி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உருப்பெற்று வருவதாலேயே, இயற்கைப் பேரிடர்கள் நம் மக்களைச் சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளாக்குகின்றன. இருக்கின்ற நீர் நிலைகளையெல்லாம் மனையாக்கி மாளிகைகளை உருவாக்கி விட்டு, மழைத் தண்ணீர் வந்து விட்டதென்று ஒப்பாரி வைப்பதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.மாறாக இங்கோ,ஆங்காங்கே செயற்கை நீர் நிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.அவற்றில் ‘அலிகேட்டர்’என்றழைக்கப்படும் முதலைகளும் நிறைய வாழ்கின்றன.நம் கண்களுக்கும் அடிக்கடி விருந்து படைக்கின்றன.
பெரிய வீடுகளாயினும்,திட்டமிடப்பட்டு ஒரே உயரத்துடன் ஓர் ஒழுங்குடன் கட்டப்பட்டிருப்பதே அழகாய் இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் 2 கார்கள் வைத்திருந்தாலும் பார்க்கிங் வசதிகளுக்கும், கரேஜ்களுக்கும் பஞ்சமில்லை..
சென்னைவாசிகளைப் போல் கார்களை வாங்கிச் சாலைகளில் பார்க்கிங் செய்யும் வழக்கம் இங்கில்லை! முறையான பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தாமல் கார்களை வாங்கிக் கொள்ள மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு கடன் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.நம் நாடு எப்பொழுதுதான் இவற்றில் கவனம் செலுத்தப் போகிறதோ தெரியவில்லை.
வீடுகளில், ஹாலோவின் திருவிழா தொடங்கி,தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பிறப்பு என்று வரிசையாக வரும் அத்தனை விழாக்களையும் கொண்டாடும் விதமாக மின் விளக்குகளால் அலங்காரம் செய்கிறார்கள். முன்னிரவில் ஒவ்வொரு நாளும் காரில் தெருக்களில் வலம் வந்து, மக்கள் அந்த மின் விளக்கு அலங்காரத்தை ரசிப்பது இங்கு ஒரு வாடிக்கையாக உள்ளது.Florida
விளையும் பயிர் முளையிலே!’என்றொரு பழமொழி நீண்ட காலமாக நம் மண்ணில் உள்ளது.ஆனாலும் சின்னஞ் சிறுவர்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை.இங்கோ…வளரும் குழந்தைகளுக்கென்று நீச்சல்,ஜிம்,தற்காப்பு என்று எல்லாத் துறைகளிலும் ஏகப்பட்ட பயிற்சிகளை அளிக்கிறார்கள். சிறுவர்களுக்கான நம் கல்வி முறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென்றே தோன்றுகிறது.
நம்மூர் திருவிழாக்களைப்போல் இங்கும் விழாக்கள் உண்டு.புத்தாண்டை வரவேற்கும் விதமாக அருகிலுள்ள ‘லார்கா’சிட்டியில் விளக்கு அலங்கார விழா ஒன்றை நடத்துகிறார்கள்.மாலையில் ஆரம்பித்து இரவு 10 மணிக்கு முடிவடையும் இந்த விழா ஏராளமான மக்களை ஈர்க்கிறது.டிசம்பர் மாதம் முழுவதும் இது நடக்குமாம்.வார இறுதி நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது.பெரிய திடலில் மரங்களுங்கூட ஒளி விளக்குகளில் மிளிர,பொழுது போக்கு விளையாட்டுக்களும்,சிற்றுண்டிக் கடைகள் மற்றும் பல் பொருட்கள் அங்காடிகளுடன் அந்த மைதானமே ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.சிறியவர்களும் பெரியவர்களும்,வயது வித்தியாசமின்றி இங்குள்ள விளையாட்டுச் சாதனங்களில் ஏறி உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.
நாமும் உற்சாகம் கொள்வோம்! ஏனெனில் அது வெளியே இல்லை.நம் உள்ளேதான் உள்ளது.
-இன்னும் நிறையச் சொல்கிறேன்…
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
My vikatan
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
http://dlvr.it/T09YqK